சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 250 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுபியுள்ளார்.
காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 11ஆம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அரச தொழில் இடமாற்றங்கள் குறித்து பிழையான தகவல்களையும் வெளியிட்டு அவற்றை கிழக்கு மாகாண ஆளுநருடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபடுத்தி கருத்துகளை வெளியிட்டதாக குறிப்பிட்டு இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்வாறு நட்டஈடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளமாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நோட்டிஸ் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் குறித்த நட்டஈட்டுத் தொகையை கிழக்கு மாகாண பாடசாலை வளர்ச்சிக்கு வழங்குமாறும் இல்லையேல் நசீர் அஹமட் மீது மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நட்டஈட்டுத் தொகை கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(சாய்ந்தமருது செய்தியாளர்)