நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற பொசன் பௌர்ணமி தினத்தன்று மதுபான தன்சல் வழங்கி அதன் வீடியோவை ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, பொலிஸ்மா அதிபர் இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைந்திருந்தார்.
அதன்படி 20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்களும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலத்துக்காக அழைக்கப்பட்டிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது, இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மது போத்தல்களில் தேநீர் ஊற்றியதாகவும், டிக்டோக் பிரபல்யத்துக்காக மேற்கண்ட செயலை செய்ததாகவும் கூறியுள்ளனர்.
எவ்வாறெனினும், குறித்த ஆறு நபர்களையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள், அவர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சம்பவத்தில் கைதானவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்