கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களின் பாவனையால் சிறுவர்கள் பார்வை இழக்கும் அபாயத்தில் உள்ளதாக சிறுவர் வைத்தியசாலையின் முன்னாள் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் தர்மா இருகல்பண்டார தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், முதலாம் தரத்தில் பிரவேசித்த மாணவர்களுக்கு சுகாதாரத் திணைக்களத்தினால் கண், பற்கள் மற்றும் காது தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 6 பிள்ளைகளுக்கு, 10 மற்றும் 12 மீற்றர் இடைவெளியில் உள்ள எழுத்துக்களை வாசிக்க முடியாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், குழந்தைகள் அழும் போதும், அவர்களுக்கு உணவளிக்கவும், மருந்து மற்றும் திரவங்களை வழங்கவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்பள்ளி வயது முதலே கையடக்கத் தொலைபேசிகளை வழங்கி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது செய்யக்கூடாத ஒன்று எனவும், இதனால் எதிர்காலத்தில் பிள்ளைகளின் கல்வி கூட பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.