நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் போலா டினுபு வெற்றியீட்டியுள்ளார். நைஜீரியாவின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
2015ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலுள்ள ஜனாதிபதி மொஹம்மது புஹாரி 2 தவணைகள் பதவி வகித்ததால் அவர் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. அவரின் அகில முற்போக்கு காங்கிரஸ் (ஏபிசி) கட்சியின் சார்பில் லாகோஸ் மாநில முன்னாள் ஆளுநர் போலா அஹ்மத் டினுபு (70) போட்டியிட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான மக்களின் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் உப ஜனாதிபதி அதீகு அபூபக்கர் (76) போட்டியிட்டார். தொழிற்கட்சி சார்பில் அனம்ப்ரா மாநில முன்னாள் ஆளுநர் பீட்டர் ஒபி (61) போட்டியிட்டார்.
ஜனாதிபதியாக தெரிவாகுவதற்கு ஏனைய வேட்பாளர்களை அதிகூடிய வாக்குகளைப் பெறுவதுடன், 36 மாநிலங்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்களில், அதாவது 24 மாநிலங்களில், 25 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளையும் பெற வேண்டும்.
ஆபிரிக்காவின் அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட நைஜீரியாவில் 22.5 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 9.3 கோடி பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருந்தனர்.
வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கு கைவிரல் மற்றும் முகம் அடையாள தொழில்நுட்பமும் முதல் தடவையாக பயன்படுத்தப்பட்டது.
இத்தேர்தலில் ஆளும் அகில முற்போக்கு காங்கிரஸ் (ஏபிசி) வேட்பாளர் வெற்றியீட்டியுள்ளார் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
போலா டினுபு 8.8 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாய கட்சியின் வேட்பாளர் அதிகு அபூபக்கர் 6.9 மில்லியன் வாக்குகளையும் தொழிற்கட்சி வேட்பாளர் பீட்டர் ஒபி 6.1 மில்லியன் வாக்ககுளையும் பெற்றுள்ளனர்.
24 மாநிலங்களில் 25 சதவீதத்துக்கும் அதிகமான வாக்ககுளையும் அவர் பெற்றுள்ளார் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.