(இராஜதுரை ஹஷான்)
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சர்ச்சை நிலவுகின்றன பின்னணியில் சர்வஜன வாக்குரிமை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் அவசியம் என பிரதான எதிர்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் சர்ஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் புதன்கிழமை (01) பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டம் இடம்பெற்றது.
பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 7ம் திகதி காலை 09.30 மணிமுதல் காலை 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காலை 10.30 மணிமுதல் மாலை 4 மணி வரை மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
அதேபோல் மார்ச் 08 ஆம் திகதி அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் கட்டளைகள் மீதான விவாதமில்லாமல் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அரச நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள 24 யோசனைகளுக்கு அனுமதி பெற்றுக்கொள்ள சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் 'சர்வஜன வாக்குரிமை' தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை மாலை 05.30 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டள்ளது. இவ்விரு தினங்களில் காலை 09.30 மணிமுதல் காலை 10.30 மணிவரையான காலப்பகுதி; வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.