சர்ச்சைக்குரிய வர்த்தகப் பெண்மணி திலினி பிரியமாலி 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் ஜூன் 5ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்தத் தொகையை செலுத்தி வழக்கைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்று திலினி பிரியமாலி தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நேற்றைய தினம் பணம் செலுத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும், அது அவ்வாறு செலுத்தப்படவில்லை, எனவே வழக்கின் விசாரணைக்கு ஒரு திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை ஜூன் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் விசாரணைக்கு ஒத்திவைத்ததுடன், சமரசம் ஏற்பட்டால் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.
2013ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த சமித் அனுருத்த என்ற நபரிடம் வாகனம் பெற்றுக் கொண்டு 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய வர்த்தகப் பெண் திலினி பிரியமாலிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.