பலப்பிட்டிய ஆதார மருத்துவமனையின் மருந்தக களஞ்சியத்தில்
ஏற்பட்ட தீ தற்போது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.எவ்வாறாயினும், தீ பரவல் காரணமாக களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
நேற்று (21) மாலை 5.45 மணியளவில் மருந்தகம் இருந்த மாடியில் புகை வெளியேறியதைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் அம்பலாங்கொட பொலிஸாருக்கு அறிவித்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர், காலி தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியதோடு, பெரும்பாலான மருந்துகளை பாதுகாக்க முடிந்ததாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.