பீ.எம்.றியாத்
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் அல்முனீரா வட்டார 6ஆம் பிரிவு தேர்தல் பிரசார பரப்புரைக் கூட்டம் எ.எல். சபாத் அஹமட் தலைமையில் கபானா வளாகத்தில் (16) நடைபெற்றது.
பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி தேர்தல் முகாமையாளர் முஹம்மது நிஸாம் பர்ஸாத்தின் நெறிப்படுத்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் விஷேட உரை நிகழ்த்திய ஏ.கே. சிஹாத் இஸ்லாஹி, நாட்டின் தேர்தல் களநிலவரத்தை விரிவாக மக்களிடத்தில் தெளிவுபடுத்திப் பேசியதோடு, நாட்டு மக்கள் அனைவரும் தேசிய நீரோட்டத்தில் பயணித்து அனைத்து இன மக்களுடனும் சகவாழ்வைப் பேண வேண்டும் என்று குறிப்பிட்டார்.
முதன்மை வேட்பாளர் எஸ்.எம்.எம். நிஸாம் உரையாற்றுகையில், இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நாட்டை ஆளப்போகும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினூடாக பயணிப்பதன் மூலமே எமது மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாற்றுக் கட்சியில் அதிருப்தியடைந்த பல போராளிகள் ஐக்கிய மக்கள் சக்தியோடு இதன்போது இணைந்து கொண்டதோடு, தங்களது உளக்குமுறல்களையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
கலந்து கொண்ட வேட்பாளர்கள் அனைவரும் ஊழலற்ற புதியதோர் சபையை உருவாக்க திடசங்கற்பம் பூண்டதோடு, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தி அட்டாளைச்சேனை பிரதேச சபையை கைப்பற்றும் எனவும் குறிப்பிட்டனர்.