மரத்தில் இருந்து விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் மூளைச்சாவு அடைந்த 44 வயதுடைய நபரின் மனைவி அவரது உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்ததை தொடர்ந்து பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.
முன்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள தனது மூன்றரை வயது மகனுக்கு பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்காக கிராம்பு பறிக்கச் சென்ற ஒருவர் மரத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
மெனிகின்ன உடகம பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த பந்துல சேனாரத்னவின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் வைத்தியசாலையிலுள்ள மூன்று நோயாளர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சத்திரசிகிச்சை நிபுணருமான வைத்தியர் புத்திக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மரத்தில் இருந்து விழுந்து படுகாயமடைந்த பந்துலவின் உயிரைக் காப்பாற்ற பேராதனை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடுமையாக போராடியுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பந்துலவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்த மருத்துவர்கள், கணவரின் உடல் நிலை குறித்தும், பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அவரது உடல் உறுப்புகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவரது மனைவிக்கு விளக்கமளித்துள்ளனர்.
இதனையடுத்து, மனைவியின் சம்மதத்தைத் தொடர்ந்து குறித்த நபரின் உடலுறுப்புக்களை கொண்டு மூவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.