ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகளை சோதனை செய்த போது பல்வேறு போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவக் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் பெற்றோர்கள் இன்றி நண்பர்களுடனும் அயலவர்களுடனும் இணைந்து சிவனொளிபாதமலைக்கு சென்றவர்கள் என்றும் இவர்கள் சுமார் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (18) திகதி கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டிபேரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, ஹோமாகம, பொலன்நறுவை உள்ளிட்ட நாட்டின் பல பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 50 கிராம் கேரள கஞ்சா, 120 கிராம் மதன மோதகம், 12 போதை மாத்திரைகள், 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், உள்ளிட்ட போதை பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் அனைவரையும் இன்று (19) ஆம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.