பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட 70க்கும் அதிகமானோர் அங்கிருந்து லாகூருக்கு பேருந்தில் புறப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்து பஞ்சாப் மாநிலம் கல்லார் கஹார் நகரில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் சாலையில் தறிக்கெட்டு ஓடிய பேருந்து எதிர்திசையில் வந்த 3 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. அதன் பின்னர் பேருந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது.
குறித்த விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கோர விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலத்த காயமடைந்த சுமார் 60 பேரை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.