அக்குரணை பிரதேச சபையை இலக்கு வைத்து பலம் வாய்ந்த சுயேற்சைக் குழுவொன்று தேசிய கட்சிகளின் உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு போட்டியிட திட்டுமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாடு முழுவதும் சூடாக நடைபெற்று வரும் நிலையில் அக்குரணை பிரதேச சபையை இலக்கு வைத்து அக்குரணை சார்பாக, பிரதேச சபையின் தற்போதைய தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன் தலைமையில் பலம் வாய்ந்த ஒரு அணியை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் களமிறக்குவதற்காக முக்கியஸ்தர்கள் சிலர் முழுவீச்சில் முயற்சித்த நிலையில் அம்முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்குரணை பிரதேச சபையின் தற்போதைய தலைவர் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியில் குழுவொன்றை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் அவர்கள் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில்தான் தற்போது சுயேற்சைக் குழுவாக பலம் வாய்ந்த அணியொன்று களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தேசிய மட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு முஸ்லிம் கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய உற்பத்தி திறன் போட்டியில் அக்குறணை பிரதேச சபை அகில இலங்கை ரீதியில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தது மட்டுமன்றி இலங்கை முழுவதுமுள்ள பிரதேச சபைகளில் முஸ்லிம் ஒருவரின் தலைமையில் இப்போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து முன்னனியில் இருக்கும் ஒரே சபையாகவும் இந்த சபையே காணப்படுகிறது.