Our Feeds


Monday, January 16, 2023

Anonymous

நேபாள விமான விபத்து - 68 பேரின் சடலங்கள் மீட்பு – மீட்புப் பணி தீவிரம் - விபத்து நடந்தது எப்படி?

 



நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது.


விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணை நடத்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும், ஆனால், அவர்களுடைய நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் கூறினார் காஸ்கி மாவட்ட உதவி தலைமை அதிகாரி குருதத்தா தாகல்.

“செட்டி கோஞ்சில் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் நபர்களைத் தேடுவதற்காக மீட்புப் பணியாளர்கள் கயிற்றில் தொங்கியபடி இறங்கியுள்ளார்கள்,” என்று அவர் கூறினார்.

செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிராவுலா, விமானப் பயணிகளில் 53 நேபாள குடிமக்களும் 5 இந்தியர்களும் இருந்ததாகக் கூறினார்.

ரஷ்யாவை சேர்ந்த 4 பயணிகள், கொரியாவிலிருந்து இரண்டு பயணிகள் மற்றும் அயர்லாந்து, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு பயணியும் இருந்ததாகக் கூறினார்.

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைய செய்தித் தொடர்பாளர் ஜெகநாத் நிருலா, மீட்புக் குழுவினர் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளதாகக் கூறினார்.

“தற்போது கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். மீட்புப் பணி வேகமாக நடைபெற்று வருகிறது,” என்று அவர் கூறினார்.

போக்கரா சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர், விமானம் தரையிறங்க 10 முதல் 20 வினாடிகள் மட்டுமே இருந்தன எனக் கூறினார்.

விபத்து குறித்து நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி கூறுகையில், “போக்கரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேதி ஆற்றின் அருகே உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து நொறுங்கி தீப் பிடித்தது. 120 ரேஞ்சர்களும், 180 ஜவான்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ” என்றார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, 72 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் விமானம் போக்கரா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

விமானத்தில் மொத்தம் 68 பயணிகள், 4 பணியாளர்கள் இருந்ததாக காத்மண்டு போஸ்ட் பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது. எட்டி ஏர்லைன்ஸின் இந்த விமானம் பழைய விமான நிலையத்திற்கும் போக்கரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்திற்குள்ளானது.

எட்டி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் சுதர்சன் பர்துலா ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் கூறுகையில், “விமானத்தில் 68 பயணிகளுடன் நான்கு பணியாளர்கள் இருந்தனர். இந்த விபத்தில் எத்தனை பேர் உயிர் பிழைத்தனர் என்பது இன்னும் தெரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.

நேபாள ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரதி கிருஷ்ண பிரசாத் பண்டாரி, “போக்கரா விமான நிலையத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள செட்டி ஆற்றின் பள்ளத்தாக்கில் விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 120 ரேஞ்சர்களும் 180 ராணுவ வீரர்களும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்,” எனக் கூறினார்.

காத்மண்டுவில் இருந்து இரவு 10:32 மணிக்கு விமானம் புறப்பட்டது.

தற்போது விபத்து நடந்த இடத்தில் சுமார் 200 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து 16 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக நேபாள் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் விமானத்திலிருந்து புகை எழும்புவதாகவும் அதை அணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

தரையிறங்கும்போது விமானம் விபத்திற்குள்ளானது. விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் புஷ்ப கமல் தஹால், அமைச்சர்கள் குழுவின் அவசர கூட்டத்தையும் கூட்டியுள்ளார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, விமானத்தில் ஏற்பட்ட தீ தற்போது கிட்டத்தட்ட அணைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள அரசு 5 பேர் கொண்ட கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. இந்த விபத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »