Our Feeds


Tuesday, October 25, 2022

SHAHNI RAMEES

தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கும் புதிய வரிக் கொள்கைகள்!

 

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நாட்டிலிருந்து தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வு அதிகரித்து, அது சுகாதாரம் மற்றும் பிற துறைகளை அதலபாதாளத்தில் தள்ளக்கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

எனவே, இவ்வாறான நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்துமூலமாக அறிவிக்க அந்தச் சங்கம் தீர்மானித்துள்ளது.


இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்தச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, வரிக் கொள்கையில் திருத்தங்களை சமர்ப்பிக்கும் பாரிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் உள்ளதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின்படி வரிக் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன என்பது தெளிவாகவுள்ளதுடன், மறைக்க எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் அழுத்தம் காரணமாகவே இந்த வகையான வரிக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்பது பகுப்பாய்வு செய்த பலரின் கருத்தாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்த வரிக் கொள்கைகளின் விளைவாக பல மருத்துவர்கள், கணக்காளர்கள், பொறியாளர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள ஏனைய மருத்துவமனைகளில் இந்த நிலைமை மோசமாக உருவாகி வருகிறதென்றும் பெரும்பாலான சிறப்பு மருத்துவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »