Our Feeds


Sunday, October 23, 2022

Anonymous

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு உதவ சவூதி அரேபியா தயார் : கல்முனை பிரதிமுதல்வரிடம் தூதுவர் உறுதி

 



(எம்.என்.எம். அப்ராஸ், நூருல் ஹுதா உமர் )


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு சஊதி அரேபிய தூதரகத்தினூடாக முடியுமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்படுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக சஊதி அரேபிய தூதுவர் காலித் ஹமெளத் என்.அல்கஹ்தானி ரஹ்மத் மன்சூர் பௌண்டஷன் பிரதானியும், கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரிடம் உறுதியளித்துள்ளார். 


கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூருக்கும்- சஊதி அரேபிய தூதுவர் காலித் ஹமெளத் என். அல்கஹ்தானியை கடந்த வியாழக்கிழமை (20) கொழும்பிலுள்ள அந்நாட்டுத் தூதுவராலயத்தில் இடம்பெற்ற சந்திப்பின் கலந்துரையாடலின் போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 


தொடர்ந்தும் கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவுக்கு சவூதி அரேபிய தூதுவரை பிரதம அதிதியாக கலந்து கொள்ளச் செய்வதற்கான அழைப்பை கல்லூரி சார்பில் விடுத்ததாகவும், இதன் போது கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதற்கான விருப்பதை தூதுவர் வெளிப்படுத்தியதாகவும், இந்த அரபுக்கல்லூரியின் கல்வித்துறையை இன்னும் மேம்படுத்த வேண்டுமெனவும் இக்கல்லூரியிலிருந்து வெளியாகும் மாணவர்களுக்கு சவூதி அரேபியாவில் தகுந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு உதவுவதாகவும் தூதுவர் இதன் போது உறுதியளித்தார்.


கிழக்கு மாகாணத்திலுள்ள அறுகம்பை, பாசிக்குடா போன்ற முக்கிய சுற்றுலாத்தளங்களுக்கு விஜயம் செய்து, இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும், இலங்கையின் அபிவிருத்திக்கும் கிழக்கு மாகாணத்தின் முன்னேற்றத்திற்கும் முடியுமான உதவிகளைச் செய்வதற்கும் தாம் தயாராகவிருப்பதாகவும் சஊதி அரேபியத் தூதுவர் உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »