பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போது கொலை முயற்சி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் எம்.பி.யான மொஹ்சின் ஷாநவாஸ் ரஞ்சாவிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இஸ்லாமாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் இம்ரான் கான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, இம்ரான் கானின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தேர்தல் ஆணையம் இரத்து செய்தது. வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரச தலைவர்கள் வழங்கிய பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக, ‘தோஷகானா வழக்கில்’ அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக பிடிஐ ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்திற்கு வெளியே இம்ரான்கானின் ஆதரவாளர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே இம்ரான்கானின் கட்சி ஆதரவாளர்களால் ரஞ்சா தாக்கப்பட்டார்.
தோஷ்கானா வழக்கில் பிரதிவாதியாக தான் ஆஜரான போது, இம்ரானின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக ராஞ்சா தனது எப்.ஐ.ஆரில் கூறியுள்ளார்.பிடிஐ ஆதரவாளர்கள் தனது காரை அடித்து நொறுக்கினர் மற்றும் கற்களை வீசினர் என்றும் எப்ஐஆரில் கூறியுள்ளார்.
இம்ரான் கான் சார்பில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.