(இராஜதுரை ஹஷான்)
இந்தியாவில் அயோத்தி இராமர் கோவில் விவகாரத்தை போன்று குருந்தூர் மலை விவகாரத்தை பாரதூரமாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள். குருந்தூர் மலை விவகாரத்தை உயர்நீதிமன்றம் வரை கொண்டு செல்வோம். புத்தசாசனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த பண்டார தெரிவித்தார்.
பெபிலியான சுனேத்ரா தேவி மஹா பிரிவெனா விகாரையில் வியாழக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குருந்தூர் மலை விவகாரத்தின் ஊடாக இனங்களுக்கிடையில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை பகைத்துக் கொள்ள கூடாது என குறிப்பிட்டு சிங்கள பௌத்தர்களை உளவியல் ரீதியில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளார்கள்.
குருந்தூர் மலை விவகாரத்தை இந்தியாவில் அயோத்தி இராமர் கோவில் விவகாரம் போல் பாரதூரமாக்கும் நிலையில் இருந்துக் கொண்டு கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள். புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊடாக நிறைவேற்றப்படுகிறது.
குருந்தூர் மலை விவகாரத்தில் இனங்களுக்கிடையில் பிரச்சனையை ஏற்படுத்தி, நாட்டில் இன நல்லிணக்கம் இல்லை என்பதை சர்வதேசத்திற்கு காண்பிக்கும் வகையில் கூட்டமைப்பினர் செயற்படுகிறார்கள். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரியது.
புத்தசாசன அமைச்சரும், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் குருந்தூர் மலை விவகாரத்தில் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறார்கள். புத்தசாசனத்தை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற முடியாவிடின் இவர்கள் தாராளமாக பதவி விலகலாம்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் உயர்நீதிமனறத்தை நாட தீர்மானித்துள்ளோம்.புத்தசாசனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.