Our Feeds


Sunday, October 30, 2022

Anonymous

இலங்கையில் டிஸ்னிலேண்ட் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை - வோல்ட் டிஸ்னி நிறுவனம் அறிவிப்பு.

 



இலங்கையில் வணிக நோக்கு பூங்காவைத் நிர்மாணிப்பதற்கான திட்டம் எதுவும் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வோல்ட் டிஸ்னி நிறுவனத்திடம் தற்போதைக்கு இல்லை என்று தி சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார் என்று செய்தி வெளியாகியிருந்தது.

இதுகுறித்து குறித்த பத்திரிகையால் வினவப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன், இலங்கையில் பூங்காவை திறப்பதற்கான கலந்துரையாடலை டிஸ்னி நிறுவனத்துடன் ஆரம்பித்துள்ளதாக டயானா கமகே தெரிவித்துள்ளார்.

எனினும், யாருடன் தொடர்பு கொண்டார் அல்லது மேலதிக விவரங்களை வழங்க அவர் மறுத்துவிட்டார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் அழைப்பின் பேரில், இலங்கையில் 18 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான ஆரம்பத் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள பர்பேங்குக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இலங்கையில் டிஸ்னிலேண்ட் பூங்கா ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்து வோல்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு இராஜாங்க அமைச்சர் முன்னதாக கடிதம் எழுதியிருந்ததாகவும் இந்நிலையில் டிஸ்னி நிறுவன முதலீட்டாளர் உறவுகளின் சிரேஷ்ட உப தலைவரான அலெக்ஸியா எஸ். குவாட்ரானி இராஜாங்க அமைச்சரை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நவம்பர் மாத இறுதியில் ஆய்வுகளை  நடத்துவதற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் மத்தள விமான நிலையம் உள்ளிட்ட பிரதேசத்தில் உள்ள பாரிய உட்கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்துவதற்கு இவ்வாறான முதலீடு நன்மை பயக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்ததாக செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »