எம்மால் எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும்
முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.பாதை அபிவிருத்தி,அரச நிர்மாணப் பணிகள் உட்பட பல அபிவிருத்தி பணிகளை நாம் ஓரம் கட்டி விட்டு நாடும் நாட்டு மக்களும் முகங் கொடுக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே முன்னுரிமை வழங்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.மாத்தளை மாவட்ட செயலக கெப்பட்டிபொல பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடை நிவர்த்தி செய்து பொது மக்களை பாதுகாத்து போசாக்கு மற்றும் வலிமை மிக்க ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர்,..
பட்டினியிலிருந்து மக்களை பாதுகாக்கவும், போசாக்கின்மையிலிருந்து குழந்தைகளையும் கர்ப்பிணித் தாய்மார்களையும் பாதுகாத்து கொள்ள விவசாய துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. பசி,பட்டினி,பஞ்சம் என்பவற்றிக்கு முற்றுபுள்ளி வைத்து நாட்டில் சுகதேகியான மக்களை உருவாக்குவதே இன்றைய அரசின் முக்கிய நோக்கமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நாட்டின் சகல மாவட்டங்களிலும் கருத்தரங்குகளை நடத்தி அனைவரையும் தெளிவுப்படுத்தி இத்திட்டத்தை வெற்றிக்கரமாக நடத்தி நாம், பல பாரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
எனவே எதிர்வரும் காலங்களில் நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் விவசாயத்துறையை முன்னேற்ற விவசாயிகளின் மற்றும் மீன்பிடித் துறையினரின் சகல அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்து நாட்டை கட்டியெழுப்ப சகல இனமக்களும் பேதங்களை மறந்து நாட்டிற்காக நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட முன்வர வேண்டுமென்றார்.