தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற
படகினை சோதனை செய்ததில், அதில் 12 இலட்சம் ரூபா மதிப்பிலான 1,400 கிலோ பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவையும் மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் மர்ம நபர்கள் சிலர் படகுடன் கடத்தலில் ஈடுபடுவதாக தூத்துக்குடி மாவட்ட கியூப் பிரிவு குற்றப்புலனாய்வு துறை பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து கியூப் பிரிவு பொலிஸ் ஆய்வாளர் விஜயஅனிதா மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ், சுரேஷ்குமார், சுரேஷ், கந்தசாமி, தலைமை காவலர்கள் ராமர், பாலகிருஷ்ணன், கோவிந்தராஜ், முதல் நிலை காவலர்கள் இருதயராஜ், பழனி பாலமுருகன் ஆகியோர் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டிணம் ஜீவா நகர் கடற்கரை பகுதியில் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகை சுற்றி வளைத்து அதனை சோதனை செய்ய முயன்றனர். அப்போது, அதிலிருந்து தப்பி ஓட முயன்ற நபர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில், அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து படகினை சோதனை செய்ததில், அதில் 12 இலட்சம் மதிப்பிலான 1400 கிலோ எடை கொண்ட, 41 பீடி இலை பொதிகள் இருந்தது. இதனை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி இந்திரா நகர் பிரபு (41) அலங்கார தட்டு ஜெயக்குமார் (32) தாளமுத்து நகர்-இந்திராநகர் இரட்சகர் (36) திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனி ரஞ்சித்(42) மற்றும் திரேஸ்புரம் சிலுவையார் கோவில் தெரு மெல்வர்(30) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மெல்வருகு சொந்தமான படகையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.