இஸ்லாத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூது செய்திகள் இலங்கைக்கு வந்தடைந்துள்ளன என்பதற்கான ஆதாரங்களில் ஒரு முக்கிய ஆதாரமாக கொள்ளவேண்டிய நடுகல் ஒன்று ஹெம்மாத்தகம மடுல்போவ பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்லில் ஹிஜ்ரி 133 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 133 என்றால் அனஸ் இப்னு மாலிக் (ரழி) மரணித்து 40 வருடங்களுக்குப்பின், நபியவர்களை கண்ணால் கண்ட கடைசி நபித்தோழர் மரணித்து 23 வருடங்களுக்கு பின், இமாம் மாலிக் இப்னு அனஸ் (ரஹி) மதீனாவிலும் இமாம் அபூ ஹனீஃபா (ரஹி) கூஃபாவிலும் வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில், இமாம் ஷாபி (ரஹி) இமாம் புஹாரி (ரஹி) போன்றவர்கள் பிறப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன் ஆகும்.
ஹிஜ்ரி 133 ரபீஉல் அவ்வல் மூன்றாம் நாள் மரணித்த ஒருவரை அடக்கம் செய்த இடத்தில் இருந்த நடுகல்லும், ஹிஜ்ரி 135 ஆம் ஆண்டு மரணித்த ஒருவரை அடக்கம் செய்த இடத்தில் உள்ள நடுகல்லும்தான் இந்த இரண்டு படங்களும்.
மாவனல்லை, ஹெம்மாதகமைக்கு அருகில் உள்ள மடுல்போவ மஸ்ஜித் வளாகத்தில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டு தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நேற்று அங்கு சென்றிருந்த நேரம் அவற்றை படம்பிடிப்பதற்கான வாய்ப்பு ஒன்று அமைந்தது.
இந்த கல்லின் காலத்தை தொல்பொருளியல் முறைமை ஊடாக ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கின்றது. இஸ்லாத்தின் தூது ஆரம்ப நாட்களிலேயே இலங்கைக்கு கிடைத்திருக்கிறது என்பதற்கு இதுவொரு ஆதாரமாகும்.
ஹுஸ்னி ஜாபிர்
2022-10-30
கல் எளிய, இலங்கை.
குறிப்பு:
இலங்கை முஸ்லிம்கள் பற்றிய வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுக்கள், நடுகல் போன்றவை கண்டெடுக்கப்பட்டால் அவற்றை உரிய ஆதாரங்கள் அடிப்படையில் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம்களின் பூர்வீக நூதனசாலைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதால் ஊர் முக்கியஸ்தர்கள் காத்தான்குடி நூதனசாலையை அல்லது முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் அவர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பது சமூகத்திற்கு பெரும் நன்மைகளை கொண்டுதரும்.