Our Feeds


Friday, October 28, 2022

Anonymous

வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடி – 08 ஆம் திகதி சபையில் விவாதம்! மனோ, அநுர கூட்டு பிரேரணை முன்வைப்பு

 

 

நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியும், தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியும் முன்வைத்த கோரிக்கையை இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது.



இதன்படி வரவு – செலவு திட்டத்துக்கு முன்னர் கூடும் நாடாளுமன்ற வாரத்தின் முதலாம் நாளான நவம்பர் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று இந்தக் கருப்பொருளில் முழு நாள் விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இது பற்றி மனோ எம்.பி. மேலும் கூறியதாவது:-

“பெருந்தோட்டத் துறை 51 விகிதம், நகரத் துறை 43 விகிதம், கிராமியத் துறை 34 விகிதம் என்ற ஐ.நா. நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த வாரம், இந்நாட்டின் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ள பெருந்தோட்டத் துறை மக்களின் வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை, நான் கொண்டு வந்து விவாதத்துக்கு உள்ளாக்கி இருந்தேன்.

நாட்டில் வாழும் அனைத்து நலிந்த பிரிவினர்கள் தொடர்பில் கூட்டாகப் பிரேரணை கொண்டு வந்து முழுநாளும் விவாதிப்போம் என்ற யோசனையை ஜே.வி.பியின் தலைவர் நண்பர் அநுரகுமார திஸாநாயக்கவும், நானும் அதன்பின் பேசி முடி செய்தோம்.

இதன்படி இன்று அநுரகுமார திஸாநாயக்க அதுபற்றி கருத்திட, அதை நான் ஆதரிக்க கட்சித் தலைவர்கள் தற்போது எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி கணக்கெடுப்புகளின்படி மிக அதிகமாக துன்புறும் நலிந்த பிரிவு குடும்பங்கள் தொடர்பாக முழு தேசமும், உலகமும் அறிந்துகொள்ளும் வண்ணம் நமது பிரேரணை அமையும்.

பெருந்தோட்ட உழைக்கும் குடும்பங்கள், நாளாந்த வருமான நகர பாமர குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், விவசாய குடும்பங்கள், ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர் குடும்பங்கள், மத்திய கிழக்கு உழைப்பாளர் குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்பில் நாம் விவாதிக்க உள்ளோம்.

இந்தப் பிரிவினருக்கு விசேட ஒதுக்கீடு அடிப்படைகளில் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்பதும், சமுர்த்தி வாழ்வாதார உதவி பெருகின்றவர்களின் பட்டியல் அரசியல் தலையீடுகளினால், பாகுபாடு மிக்கதாக அமைத்துள்ளது என்றும், ஆகவே அந்தப் பட்டியல் உண்மையிலேயே நலிந்த பிரிவினரை உள்வாங்கும் முகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நான் கோர விரும்புகின்றேன்.

எனது இந்த நிலைபாட்டை ஆதரிக்கும்படி நாடு முழுக்க வாழும் மக்கள், தாம் வாக்களித்து தெரிவு செய்த தமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற வேண்டும் எனவும் கோருகின்றேன்” – என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »