ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ்
2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக்குவோம். இதற்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி அர்ப்பணிப்புடன் பாடுபட தயாராக உள்ளோம். எனது தாய் வீட்டிலிருந்து இனியொரு போதும் வெளியேற மாட்டேன் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.ஐ.தே.க.வின் 76 ஆவது சம்மேளனம் நேற்று (08) செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் இ
இந்த நிகழ்வுக்கு வருகை தரும்போது நான் ஒரு அந்நியனாக உணரவில்லை. காரணம் இதற்கு முன்னர் தந்தையுடன் கோபித்துக் கொண்டு எனது இல்லத்திலிருந்து வெளியேறியிருந்தேன். எந்தவொரு நபரின் வாழ்விலும் இது இயல்பாக இடம்பெறும் ஒன்றாகும். எனினும் மீண்டும் கோபம் மறந்து தந்தையுடன் இணைந்துள்ளேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சவாலை ஏற்று பின்னால் திரும்பிப் பார்த்தபோது , அங்கு எவரும் இல்லை. எனவே, தான் அவர் தனித்து விடக் கூடாது என்பதற்காக நாம் எமது ஒத்துழைப்பை வழங்கினோம். நாடாளுமன்றத்தில் சுமார் ஒரு மாதம் என்ற குறுகிய காலத்துக்குள் 134 பேரின் விருப்பினைப் பெற்றுள்ளார். விளையாட்டென்றால் இதுவே விளையாட்டாகும். சிரேஷ்டத்துவம் என்றால் இதுவே சிரேஷ்டத்துவமாகும்.
சுதந்திரத்தின் பின்னரும் கையேந்தும் நாடாக இலங்கை காணப்படுகிறது. இதற்கு காரணம் தவறான தீர்மானங்ளே ஆகும். எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் 2048 இல் இலங்கையை கடன் அற்ற நாடாக மாற்றியமைக்க முடியும். அதற்கு எவ்வித நிபந்தனையும் இன்றி அர்ப்பணிப்புடன் செயற்பட நாம் தயார். நாட்டை ஸ்திரமாக்குவதற்கு ஒத்துழைப்பினை வழங்காதவர்களுக்கு எதிரான போராட்டத்தினை நாம் விரைவில் ஆரம்பிப்போம்.
எனது தாய் வீட்டுடன் மீண்டும் இணைந்துள்ளேன். இனி இங்கிருந்து செல்லப் போவதில்லை. ஆசை ஆனால் பயம் என்று கூறுபவர்கள் , தமது தலைவர்கள் இணையவில்லை எனில் நீங்களாவது இணையுங்கள் என்று வலியுறுத்துகின்றேன் என்றார்.