இலங்கையிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை காலை இலங்கை திரும்பினார் என சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
நெருக்கடியில் சிக்கியுள்ள நாட்டில் மீண்டும் பதற்றங்களை உருவாக்ககூடிய நடவடிக்கையாக இது காணப்படுகின்றது.
இலங்கையை ஒரு காலத்தில் இரும்பு பிடியுடன் ஆட்சி செய்த ராஜபக்ச – தசாப்த காலத்தில் நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியை அவர் கையாண்ட விதம் காரணமாக சீற்றமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவர் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்து அவரது உத்தியோகபூர்வ வாசல்ஸதலத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து அங்கிருந்து ஜூலை 13ம் திகதி மாலைதீவிற்கு தப்பியோடியபின்னர் அதிகளவில் கவனத்தை ஈர்க்காத வண்ணம் வாழ்ந்தார்.
நாட்டில் காணப்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் அவர் ஏன் மூன்று ஆசிய நாடுகளிற்கு சென்றார் என்பது குறித்து அவர் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.
ஏன் தான் திரும்பிவர தீர்மானித்தார் என்பது குறித்தும் அவர் தெளிவுபடுத்தவில்லை.
சில செயற்பாட்டாளர்கள் கோட்டாபய குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர் ஆனால் அவரின் சகாக்கள் ஆட்சியில் உள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெறாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் 22 மில்லியன் மக்களை கொண்ட நாட்டிற்கான அவரது மீள்வருகை மேலும் ஆர்ப்பாட்டங்களை தூண்டுமா என்பது நிச்சயமற்ற விடயமாக காணப்படுகின்றது.
மாலைதீவு சிங்கப்பூர் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருந்த பின்னர் அவரை அனுமதிப்பதற்கான நாடுகள் இல்லாத நிலையை அவர் எதிர்கொண்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் அவரது வாழ்க்கை முறையை தொடர்வதற்கான செலவும் ஒரு காரணம் என விடயமறிந்த வட்டாரங்கள் 23ம் திகதி ரொய்ட்டருக்கு தெரிவித்தன,தனிப்பட்ட விமானம் மெய்பாதுகாவலர்கள் ஜனாதிபதிக்கான தங்குமிடம் போன்றவை. இவற்றிற்காக அவர் பெரும்பணத்தை செலவிட வேண்டிய நிலை காணப்பட்டுள்ளது.
இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவிற்கான வீழ்ச்சி என்பது தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் பிரிவினைவாதிகளை தோற்கடித்தமைக்காக மக்கள் அவரை போர் அரசன் என வழிபட்ட நிலையிலிருந்து ஏற்பட்ட பாரிய மாற்றமாகும்.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவரின் வீழ்ச்சிக்கு நான் எனும் அவரது அகங்காரமே காரணமாகயிருக்கலாம் என தெரிவிக்கின்றார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன்.
வெளிநாட்டில் அவர் தங்கியிருப்பதற்கான இடத்தை கண்டுபிடிப்பது அவருக்கு மிகவும் கஸ்டமான விடயமாக காணப்பட்டது என தெரிவித்த அம்பிகா சற்குணநாதன், அவர் கற்பனை செய்ததை விட அது கடினமாக காணப்பட்டது என்கின்றார்.
ராஜபக்ச முதலில் மாலைதீவின் தலைநகருக்கு சென்றார்- கொழும்பிலிருந்து 90 நிமிடங்களில் மாலைதீவின் தலைநகருக்கு சென்றுவிடலாம்.
அவரது விமானம் தரையிறங்குவதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முகமட் நசீட் தலையிட்டார் அதன் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது என உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் இலங்கையர்கள் மகிழ்ச்சியடையவில்லை பலர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கிருந்து அவரை தூக்கி எறியுங்கள் என மாலைதீவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரின் கையில் காணப்பட்ட பதாகை தெரிவித்தது, அன்பான மாலைதீவின் நண்பர்களே குற்றவாளிகளிற்கு இடமளிக்கவேண்டாம் என உங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளுங்கள் என மற்றுமொரு பதாகை வேண்டுகோள் விடுத்தது.
இதற்கு 48 மணித்தியாலத்தின் பின்னர் கோட்டாபய ராஜபக்ச சவுதி விமானத்தில் சிங்கப்பூர் சென்றார்.
தனிப்பட்ட விஜயம் காரணமாக அவருக்கு நாட்டில் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சு ஜூலை 14 ம் திகதி உறுதி செய்தது.
அவர் புகலிடம் கோரவில்லை நாங்கள் புகலிடமும் வழங்கவில்லை என அவ்வேளை சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.
இதன் பின்னர் ராஜபக்ச சவுதி அரேபியாவிற்கு செல்லக்கூடும் என பல செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன ஆனால் அது இடம்பெறவில்லை.
அவர் ஏன் சவுதி அரேபியா செல்லவில்லை என்பதற்கான விடைகள் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் 2020ல் கோட்டாபய அறிமுகப்படுத்திய கடும் விமர்சனத்திற்குள்ளான கொவிட்டினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கை காரணமாகயிருக்கலாம் என சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நடைமுறை இஸ்லாமிய மத கொள்கைகளிற்கு முரணாணது என 2020 டிசம்பரில் இஸ்லாமிய ஒத்துழைப்பு ஸ்தாபனம் தெரிவித்திருந்தது, சவுதி அரேபியாவும் இதில் ஒரு உறுப்பு நாடு, முஸ்லீம்களின் நம்பிக்கையை அடிப்படையாக உடல்களை புதைக்கும் நடைமுறை மதிக்கப்படவேண்டும் என OIC வேண்டுகோள் விடுத்திருந்தது.
பின்னர் அந்த கொள்கையை கைவிட்ட ராஜபக்ச எனினும் கொவிட்டினால் இறந்த முஸ்லீம்களின் உடல்களை தொலைதூரத்தில் உள்ள இடமொன்றில் புதைக்கவேண்டும் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
சிங்கப்பூரிலிருந்து அவர் இலங்கையின் தலைவர் என்ற பதவியிலிருது தனது hhஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
சிங்கப்பூரில் தங்கியிருந்தவேளை கோட்டாபய ராஜபக்ச , இலங்கையின் 26 வருட உள்நாட்டு யுத்தத்தின்போது அவர் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளிற்காக குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் சாத்தியப்பாடு காணப்பட்டது.
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் சட்டத்தரணிகள் ஜூலை 23ம் திகதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என கோரும் மனுவை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தாக்கல் செய்தனர்.
இலங்கை வியாழக்கிழமை பொருளாதார ஸ்திரதன்மையை நோக்கிய நடவடிக்கையொன்றை எடுத்துள்ளது 2.9 பில்லியன் டொலர் கடனுதவி குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது.
மோசமான உணவு எரிபொருள் மருந்து தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் அரசாங்க வருமானத்தை அதிகரித்து அதன் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் ஸ்திரதன்மையை உறுதி செய்வதே இந்த நான்கு வருட திட்டத்தின் நோக்கம்.
எனினும் சர்வதேச நாணய நிதியம் இன்னமும் கடனிற்கான அனுமதியை வழங்காத நிலையில் பொருளதார மீட்சிக்கான நீண்ட நெடிய பாதையில் இலங்கை பயணிக்கவேண்டியுள்ளது.
ராஜபக்சவின் வருகை மீண்டும் நாட்டில் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூலை 21ம் திகதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பலவந்தமாக பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளனர்.
சிலர் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமை உட்பட பல குற்றங்களிற்காக கைது செய்யப்பட்டுள்ளனர், இந்த நடவடிக்கையை மனித உரிமை அமைப்புகளும் எதிர் கட்சிகளும் கண்டித்துள்ளன.
நிச்சயமாக அச்சமொன்று உள்ளது என்கின்றார் மனித உரிமை சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், மேலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுமா என்பதை தெரிவிப்பது கடினமான விடயம் ஆனால் வாழ்க்கை செலவீனங்கள் தொடர்ந்தும் அதிகமாக காணப்படுகின்றன பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது என்கின்றார் அவர்.
மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்தும் உணவு எரிபொருளை பெறமுடியாத நிலையில் உள்ள அதேவேளை இலங்கை திரும்பியவுடன் ராஜபக்ச வாழவுள்ள வசதியான வாழ்க்கை மீண்டும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்த உள்ளது.
இதுவே எனது மக்களை வீதிகளிற்கு கொண்டுவருகின்றது இந்த ஏமாற்று- நடவடிக்கைகளால் அவர்கள் சீற்றமடைகின்றனர் என்கின்றார் அம்பிகா சற்குணநாதன்.
முன்னாள் தலைவர் யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்கின்றார் உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா.
அரசியல் வர்க்கம் அவரை பாதுகாக்கும் அவர் தப்பியோடிய போதிலும் அவருக்கு தேவையான அவசியமான கட்டமைப்புகளும் அப்படியே உள்ளன என தெரிவிக்கும் ஜஸ்மின் சூக்கா ஆர்ப்பாட்ட இயக்கம் உடைந்து அச்சமடைந்து சிதைவடைந்ததாக காணப்படுகின்றது என தெரிவிக்கின்றார்.
துணிச்சலான சிவில் சமூக குழுவொன்று அவருக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்வதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் என்ற எதிர்பார்ப்பும் சட்டமா அதிபர் திணைக்களமும் காவல்துறையும் அதற்கு அனுமதியளிப்பார்கள் என்ற நம்பிக்கையும் எப்போதும் உள்ளது என்கின்றார் ஜஸ்மின் சூக்கா.
நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளகூடாது. கோட்டாவை உரிய விதத்தில் இலங்கை கையாள்வது எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை உலகிற்கு தெரிவிக்கும் என்கின்றார் ஜஸ்மின் சூக்கா.
நன்றி: வீரகேசரி