(எம்.எப்.எம்.பஸீர்)
மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, நாட்டிலிருந்து சென்ற பின்னர் பதவி துறந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாளை மறுதினம் 3ம் திகதி மீள நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை பிரகாரம் இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அதன் பிரகாரமே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளதாக அறிய முடிகிறது.
அவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாடு திரும்பினால், அவருக்கு கொழும்பு 7, பெளத்தாலோக்க மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தை ஆகியவற்றுக்கு அருகே அமைந்துள்ள அரச வீடு ஒன்றை வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ வசிக்கும் வீட்டுக்கு அருகே இந்த வீடு வழங்கப்ப்டவுள்ளதாக அறிய முடிகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பி தனது மிரிஹானை இல்லத்தில் வாழ விரும்பினாலும், அவரது பாதுகாப்பை கருத்திற்கொண்டு, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்க வேண்டிய வரப்பிரசாதம் என்ற அடிப்படையில் இந்த வீட்டை வழங்க அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறிய முடிகிறது.
நன்றி: MetroNews