ரயில்களை முறையாக பராமரிப்பதற்கு தேவையான உதிரிப்பாகங்களுக்கு நிலவும் கடுமையான தட்டுப்பாடு காரணமாக அதிக எண்ணிக்கையான ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் புகையிரத தடம் புரள்வுகள் அதிகரிக்கும் என ரயில் நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்களில் பல தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சேவைகள் அடிக்கடி இரத்துச் செய்யப்படுகின்றன. கடந்த காலங்களில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பொருத்தமற்ற ரயில்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் சில ரயில் பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரயில் பெட்டிகளை விட 1980 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட வண்டிகள் சேவையில் ஈடுபடுத்துவதற்கு ஏற்றவையாக உள்ளன. ஆனால் இவை தற்போது சேவையில் இருந்து அகற்றப்பட்டுள்ளதோடு , பராமரிப்பின்றியும் காணப்படுகின்றன என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.