எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு கண்டு விட்டோம்.
இனி பிரச்சினையில்லை என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. வெகுவிரைவில் பசியின் கொடுமை மக்கள் போராட்டமாக தீவிரமடையும். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பொறுப்புடன்,முறையாக செயற்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்று (20) செவ்வாய்க்கிழமை பிரதரமரால் முன்வைக்கப்பட்ட தேசிய சபை பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது. அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய சபையை ஸ்தாபிக்கும் யோசனையை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவிடம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முன்வைத்தோம்.
தேசிய சபையின் பிரதான நோக்கம் கூட்டு பொறுப்பினை அடிப்படையாக கொண்டதாக காணப்பட வேண்டும் என பரிந்துரைத்தோம்.
பிரதமர், அமைச்சரவை மற்றும் அமைச்சரவையின் விடயதானங்கள் உட்பட முக்கிய தீர்மானங்கள் தேசிய சபை ஊடாக எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்தோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விவசாயத்துறை தொடர்பில் தனித்து எடுத்த தீர்மானம் இன்று பாரிய விளைவை ஏற்படுத்தியுள்ளது. அவரது தனி தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டியுள்ளது.அதனால் தேசிய சபை ஊடாக எடுக்கும் சகல தீர்மானங்களும் கூட்டு பொறுப்பை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.