பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம்கொண்ட கட்சியின் தலைவர் பிரதமராக தெரிவு செய்யப்படுவது வழக்கம்.
பிரதமர் போரிஸ் ஜோன்சன் ராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு பலர் போட்டியிட்டனர்.
இறுதியாக லிஸ் ட்ரஸும், ரிஷி சுனாக்கும் போட்டியில் இருந்தனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக பதிவு செய்திருந்த கட்சியின் சுமார் 200,000 அங்கத்தவர்களிடையே நடைபெற்ற வாக்களிப்பு பெறுபேறு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது,
இந்த வாக்களிப்பில் லிஸ் ட்ரஸ் 80,000 இற்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைபீடம் அறிவித்துள்ளது. ரிஷி சுனாக் சுமார் 60,399 வாக்குகளைப் பெற்றார்.
இதன்படி புதிய தலைவராகவும் பிரிட்டனின் புதிய பிரதமராகவும் லிஸ் ட்ரஸ் எனும் மேரி எலிஸபெத் ட்ரஸ் (Mary Elizabeth Truss ) தெரிவாகியுள்ளார்,
47 வயதான லிஸ் ட்ரஸ், பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை செவ்வாய்க்கிழமை அவர் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.