தனது சொந்த மாவட்டத்துக்கு கூட செல்ல முடியாத நாமல் ராஜபக்க்ஷவை மேடையேற்றி அழகு பார்த்து, மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சாபகேடாக சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (07) புதன்கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
கடந்த நாட்களில் வெளிநாட்டுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அந்நாடுகளின் அரசியல் தரப்பினர், இலங்கையர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டேன்.
முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் அதிகாரத்தை பகிர்ந்தளித்துள்ளன. புலம் பெயர் அமைப்புகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதிகார பகிர்வு அவசியமானது.
கடந்த நாட்களில் வெளிநாடுகளில் முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
காணி விவகார பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்கு தீர்வு அவசியமாகும் என்றார்.