ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதா கூறி ஐந்து கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்தார் எனக் கூறப்படும் பெண் ஒருவர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நிறுவனம் ஒன்றை நடத்தி கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக வாக்குறுதியளித்து ஐந்து கோடி ரூபாவுக்கும் மேலாக மோசடி செய்த பெண் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய மோசடி விசாரணை பிரிவு பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.
நுகேகொட பிரதேசத்தில் வசிக்கும் 46 வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே நீர்கொழும்பு ஏத்துகால பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பிராந்திய விசேட மோசடி விசாரணை பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து விசாரணையின் பின்னர் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், 50 இலட்சம் ரூபா முதல் 70 இலட்சம் ரூபா வரை ஒருவரிடமிருந்துபெற்றுக் கொண்டுள்ளதாகவும் நீர்கொழும்பு நகரில் ஆறு பேர் இதுவரை இவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, நாட்டின் பல பிரதேசங்களிலும் வாடகைக்கு பெற்ற வீடுகளில் இருந்து சந்தேக நபர் இவ்வாறு பண மோசடி செய்துள்ளதாகவும் மிரிஹான மற்றும் மாரவில பிரதேசங்களை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த பெண்ணிடம் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த பெண்ணிடம் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் இது சம்பந்தமான ஆதாரங்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபரான பெண் நேற்று நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மாலன் திசார ஜயசூரிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்