மரணிப்பதற்கு முன்னர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன். எனவே எனக்கு மன்னிப்பு வழங்கியமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன்.
நான் மக்கள் சார்பானவன் என்பதால் அரசியலில் சுயாதீனமாகவே செயற்படுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
மன்னிப்பின் கீழ் இன்று (26) வெள்ளிக்கிழமை விடுதலையான அவர் , வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,
கிடைத்துள்ள விடுதலைக்கு நன்றி கூறுகிறேன். மக்களுக்காகவே நான் இந்த தீர்மானத்தை எடுத்தேன். நான் மரணிப்பதற்கு முன்னர் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்து மக்களுக்கு சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கமைய எனக்கு விடுதலை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
நீதித்துறை அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷவிடம் ஊழல் – மோசடிக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வேன் என்று நான் வாக்குறுதியொன்றை வழங்கியுள்ளேன். எவ்வாறிருப்பினும் ஊழல்வாதிகள் பிடிப்பதை சிலர் விரும்பமாட்டார்கள் என்று எண்ணுகின்றேன் என்றார்.