நீண்டகால அடிப்படையின் கீழ் எரிபொருள் இறக்குமதி,கொள்வனவு, நாட்டுக்குள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர சேவையாளர் சங்கம், அதன் தலைவர் சேத்திய பண்டார ஏக்கநாயக்க மற்றும் செயலாளர் பண்டார அரம்பேகும்புர ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதிக்கு பதிலாக சட்ட மா அதிபர்,பிரதமர்,மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், உள்ளிட்ட 28பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் தெரிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்தல், நாட்டுக்குள் இறக்குமதி செய்தல், நாட்டுக்குள் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியளித்து அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக கடந்த ஜூன் 29ஆம் திகதி ஊடகங்கள் ஊடாக அறிந்து கொண்டதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 24ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் படி நீண்டகால அடிப்படையில் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு எமது நாட்டுக்குள் நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகம னுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.