முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் சொகுசு ஹோட்டலொன்றுக்குத் தீ வைத்ததோடு, அங்குள்ள பொருள்களைக் களவாடிச் சென்றார்கள் எனும் குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கராஜ வனப்பகுதிக்கு அருகாமையிலுள்ள கொலன்னா, எம்பிலிப்பிட்டிய – கொங்கலகந்தவில் அமைந்துள்ள ‘கிரீன் எகோ லொட்ஜ்’ ஹோட்டலுக்கு கடந்த மே மாதம் 10ஆம் திகதி தீ வைத்து, அங்குள்ள பொருள்களைக் களவடிச் சென்றாகக் கூறப்படும் சந்தேக நபர்களை கொலன்னா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று முன்தினம் திங்கள் மற்றும் நேற்று செவ்வாய்கிழமைகளில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் 25 மற்றும் 50 வயதுடைய கொலொன்னா பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மே 10 அன்று ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் சொகுசு ஹோட்டல் தீக்கிரையாக்கப்பட்ட உடனேயே, அந்த ஹோட்டல் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று தகவல்கள் வெளியாகின.
அந்த ஹோட்டல் யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமானது என சில ஊடகங்கள் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அதனை அவர் உடனடியாக நிராகரித்திருந்தார்.
இருந்தபோதிலும், அந்த ஹோட்டல் மஹிந்த ராஜபக்பக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மஹிந்தவின் மூன்றாவது மகனுக்கு குறித்த ஹோட்டல் சொந்தமானது என தகவல்கள் வெளியானபோதும் ரோஹித வாய் திறக்காமல் இருந்துள்ளார்.
ரோஹித தனது தந்தை பிரதமராக இருந்த காலத்தில் எந்த உத்தியோகபூர்வ பதவியையும் வகிக்கவில்லை. இருப்பினும் அவர் அடிக்கடி அலரிமாளிகையில் காணப்பட்டார். அவரின் வருமான ஆதாரம் குறித்து அடிக்கடி கேள்விக்குட்படுத்தப்பட்டார். அவர் எந்தவோரு வேலையிலும் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.
தீ வைப்புடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.