அனைத்து தரப்பினருக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்துடன் கூடிய ஆட்சிக் கட்டமைப்பை அமைப்பதே தமது நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் பல தரப்பினருடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.
நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவை நியமிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக இதன்போது தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சில இடைக்கால குழுக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தேசிய பேரவையை உருவாக்குவதே பிரதான இலக்கு என சுட்டிக்காட்டிய அவர், அதற்காக அனைத்து கட்சிகளின் பிரதிநிதித்துவமும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் முழுமையான பிரதிநிதித்துவமும் அவசியம் எனவும் தெரிவித்தார்.
குழுத் தலைவர்களுக்கு சமமான அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் வழங்குவதன் முக்கியத்துவத்தையும் ரணில் விக்ரமசிங்க விளக்கினார்.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.