மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 50 கிலோ கிராம் நிறையுடைய 100இற்கும் அதிகமான கோதுமைமா மூடைகள் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று (23) மதியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கோதுமை மா மூட்டைகள் அனைத்தும் களஞ்சியப்பட்டிருந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன், மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த கோதுமைமா மூடைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நபருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த நபர் மன்னார் நகர் பகுதியில் வெதுப்பகம் ஒன்றை நடாத்தி வருவதுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவும் குறித்த வெதுப்பகத்தில் பாவனைக்கு உதவாத கோதுமைமா மூடைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், எதிர்வரும் நாட்களில் மன்னார் நகர் பகுதிகளில் உள்ள வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் அவற்றின் களஞ்சியசாலைகள் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.