பொதுவாக பாம்புகளில் இருந்து, அதன் விஷம் சேகரிக்கப்பட்டு மருத்துவப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவது குறித்து கேள்விப்பட்டு இருப்போம். இதே போல, துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில், தேள்களில் இருந்து விஷம் எடுக்கப்பட்டு, அது பல்வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்துவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பாம்புக்கு எந்தளவுக்குப் பயப்படுகிறோமோ அதேயளவுக்கு தேளுக்கும் பயம் உண்டு.
அதாவது, இந்த ஆய்வகத்தில் ஆயிரக்கணக்காக தேள்கள் தனித்தனியாக, நன்றாக வெளியே தெரியும்படியான பிளாஸ்டிக் பெட்டிகளில், வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வக ஊழியர்கள் ஒவ்வொரு பெட்டியில் இருந்து தேளை வெளியே எடுத்து, உரிய உபகரணத்தை கொண்டு அவற்றை இறுக பிடித்து, இடுக்கியை கொண்டு அதன் விஷக் கொடுக்கை நன்றாக அழுத்துகின்றனர்.
இப்போது தேள் அதன் விஷத்தை உதிர்க்கிறது. பின்னர் அந்த விஷம் உறைய வைக்கப்பட்டு, பின்னர் பொடியாக மாற்றி விற்கப்படுகிறது. இதில் ஒரு தேள் மட்டும் 2 மில்லிகிராம் வரை விஷம் தருகிறது.
``2020 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வகத்தில், தற்போது எங்களிடம் 20,000 தேள்கள் உள்ளன. தேள்களுக்குள்ளே இனப்பெருக்கம் செய்வது, அவற்றிலிருந்து விஷத்தை எடுப்பது போன்ற இரண்டையும் இங்கு செய்கிறோம். விஷத்தை உறைய வைத்து, பின்னர் அவற்றை பொடியாக்கி ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கிறோம்'' என இந்த ஆய்வகத்தின் உரிமையாளர் மெடின் ஒரன்லர் (Metin Orenler) தெரிவித்துள்ளார்.
ஒரு லிட்டர் தேள் விஷத்தின் விலை சுமார் 10 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 79 கோடி) பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள், வலி நிவாரணிகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
நன்றி: விகடன்