கடந்த காலங்களில் தாம் நாட்டுக்காக மேற்கொண்ட பணிகளைப் போன்று எதிர்காலத்திலும் நாட்டுக்காக பாடுபடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிடுகிறார்.
நாடாளுமன்றத்தின் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த கடிதம் நேற்று (16) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்கவினால் வாசிக்கப்பட்டது.
அதில் 2019 நவம்பர் 18ஆம் திகதி இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தாம், பதவிக்கு வந்த மூன்று மாத காலத்திலேயே கொரோனா பரவல் நாட்டை பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எனினும் அந்த கொரோனா தொற்றில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக தாம் மகிழ்ச்சி அடைவதாக கோட்டாபய ராஜபக்ஷ தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தவகையில் நாட்டை முன்கொண்டு செல்ல சர்வ கட்சிகள் அடங்கிய அரசாங்கமொன்றை அமைத்து முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தாம் கடந்த காலங்களில் தாய் நாட்டுக்காக செய்த சேவை போன்று எதிர்காலத்திலும் தாய் நாட்டுக்காக சேவை செய்வதில் விருப்பம் கொண்டிருப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.