குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைதொடர்ந்து குடியரசு தலைவருக்கான தேர்தல் ஜூலை 18ஆம் திகதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி குடியரசு தலைவர் வேட்பயாளராக திரௌபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் தேர்தலில் நிறுத்தியுள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும். எம். எல்.ஏ.க்கு ‘பிங்க்’ நிற வாக்குச் சீட்டும் தரப்படும். தமிழக சட்டசபையில் 234 உறுப்பினர் வாக்களிக்க உள்ளனர்.
குடியரசு தலைவருக்கான தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவர்களுக்கு நடைபெறும்.
பிரதமர்-முதல்வர் வாக்களிப்பு
நாடாளுமன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார். இதேபோல் தமிழக தலைமை செயலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.