ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது
பதவியை ஜூலை 14ஆம் திகதி இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்றுமுன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.புதிய ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதுவரையில் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பிரதமர் முன்னெடுத்துச் செல்வதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
விடேச ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே, அவர் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.
நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாகவே பதவியை இராஜினாமா செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.