Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

அமைச்சரவை கூடவில்லையெனில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை..!

 

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அரச ஊழியர்களுக்கு இம்மாதம் உரிய திகதியில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட வேண்டியமையே இதற்கான காரணமாகும். மேலும், அதற்கான அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

இதற்காக, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமித்து தற்போதுள்ள அமைச்சரவையின் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைத்து உரிய தீர்மானத்தை எடுப்பதே ஒரே தெரிவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அமைச்சரவை கலைக்கப்படும் எனவும், அதற்கமைய, உரிய தீர்மானத்தை எடுப்பதற்கு, மீண்டும் பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டினால் மட்டுமே, இம்மாதம் 25ஆம் திகதிக்குள் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியுமெனவும் கூறப்படுகிறது.

அமைச்சரவையின் முடிவு நாணயச் சபைக்கு அனுப்பப்பட்ட பின்னர் பணத்தை அச்சிடுவதற்கு சட்டப்பூர்வமான அனுமதி வழங்கப்படும்.

மேலதிக நேரம், விடுமுறை நாட்கள், வாழ்க்கைச் செலவுகள் என சகல கொடுப்பனவுகளையும் தவிர்த்து சம்பளத்திற்கு மாத்திரம் மாதாந்தம் தேவைப்படும் தொகை சுமார் 29 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »