Our Feeds


Monday, May 2, 2022

Anonymous

கொழும்பு அரசியலில் நெருக்கடி - இன்றும் நாளையும் பல முக்கிய கலந்துரையாடல்கள்

 



தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் பல முக்கிய கலந்துரையாடல்கள் இன்றும் (02) நாளையும் (03) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சர்வகட்சி ஆட்சி அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, சுயேட்சைக் குழுக்களினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று காலை நடைபெறவுள்ளது.


இந்த கலந்துரையாடலில் நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திரான் அலஸ் மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.


கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட கூட்டத்தைத் தொடர்ந்து, சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காகவும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காகவும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.


இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ள இக்குழுவினர் நாளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடவுள்ளனர்.


மேலும், இன்றும் நாளையும் சுயேச்சைக் குழுக்களின் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


தற்போதைய அரசியல் குழப்பநிலையின் அடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பாராளுமன்ற கூட்டத்தொடர் வரும் நாளை நடைபெற உள்ளதுடன் இதன்போது பிரதி சபாநாயகர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பிரதி சபாநாயகர் பதவிக்கு ஏற்கனவே இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த பதவிக்கான பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »