Our Feeds


Monday, April 4, 2022

SHAHNI RAMEES

அனைத்து அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்களும் பிரதமரிடம் கையளிப்பு - தினேஷ் குணவர்தன.

 

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் நேற்று (03) தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், அலரி மாளிகையில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்றிரவு இடம்பெற்றிருந்தது.

இதன்போது, நீதியமைச்சர் அலிசப்ரி, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் நேற்று தமது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகுவது குறித்தும் இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், பத்திக் கைத்திறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தாம் விலகுவதாக தயாசிறி ஜயசேகர ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், அமைச்சர்களினது பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கவுள்ளார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று மீண்டும் இடம்பெறவுள்ள சந்திப்பிற்கு பின்னர் அமைச்சரவையில் திருத்தம் ஏற்படுத்துவதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »