(எம்.எப்.எம்.பஸீர்)
மின்சாரம், சமையல் எரிவாயு, பால் மா, மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு உத்தரவிடுமாறுகோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்துள்ள இரு அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உயர் நீதிமன்றம் இன்று (4) அறிவித்தது.
மனுதாரர்களான இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்காக சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள் பிரகாசத்தின் ஆலோசனைக்கு அமைய ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே. கனக ஈஸ்வரன், உதித்த இகலஹேவா சட்டத்தரணிகளான சுரேன் ஞானராஜா, புலஸ்தி ஹேவமான்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் மற்றும் பிரதிவாதிகளுக்காக ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளே ஆகியோரின் வாதங்களைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்மானித்தது.
அதன்படி எதிர்வரும் 8 ஆம் திகதி மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்த உயர் நீதிமன்றம், அன்றைய தினம் மனுவின் பிரதிவாதிகளான பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் அடங்கலாக 42 பேரையும் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவித்தல் பிறப்பித்தது.