இந்த ஆண்டு மொத்தம் பத்து இலட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி கொடுப்பதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்திற்குப் பிறகு தொற்றுநோய் கட்டுப்பாடுகள் தீவிரமாக இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளாக இஸ்லாமியர்களின் புனித யாத்திரையும் முடங்கியது.
இந்த ஆண்டிற்கான ஹஜ் புனித யாத்திரை பற்றி தகவல் தெரிவித்த சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சு,
‘இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு யாத்திரீகர்கள் என மொத்தம் ஒரு மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
மேலும் சவூதி அரேபியா மற்றும் உலகின் பிற நாடுகளைச் சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட, இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வெளிநாட்டிலிருந்து வரும் யாத்திரீகர்கள் கொரோனா எதிர்மறை பரிசோதனை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் சில கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021இல் சில ஆயிரம் பேர் மட்டுமே புனித யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர், அதற்கு முந்தைய ஆண்டு 1,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ்ஜை அனைத்து முஸ்லிம்களும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக உலகின் மிகப்பெரிய மத யாத்திரைகளில் ஒன்றான ஹஜ் புனிதப் பயணத்தில் 2019 இல் சுமார் 2.5 மில்லியன் மக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.