Our Feeds


Saturday, March 26, 2022

Anonymous

PHOTOS: மட்டக்களப்பில் பொலிஸ் பாதுகாப்புடன் விநியோகிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர்கள்

 



நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரின் பாதுகாப்பிற்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது.


அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு லிட்ரோ எரிவாயு விநியோக நடவடிக்கை வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸின் முயற்சியினால் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


லிட்ரோ எரிவாயு விநியோக மொத்த விற்பனை முகவர்களால் எடுத்து வரப்பட்டு சுமார் 700 சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் வாழைச்சேனை, பேத்தாழை, கல்குடா, ஓட்டமாவடி, மீராவோடை, கறுவாக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்;களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டது.


எரிவாயுக் கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்த நிலையில் மக்கள் அதிகம் காணப்பட்டுள்ளதால் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தலைமையிலான பொலிஸாரின் பாதுகாப்புடன் எரிவாயு வினியோகம் இடம் பெற்றது.


கடந்த சில நாட்களுக்கும் மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டிலுள்ள களஞ்சியசாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில், எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக தகவல் பரவியதையடுத்து பொது மக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையிலிருந்தே குறித்த இடத்தில் காத்திருக்கும் நிலைமை காணப்படுகின்றது.


இந்த எரிவாயுக் கொள்வனவில் ஆண்கள், பெண்கள் அதிகளவாக வருகை தந்து பெற்றுச் சென்றதைக்காண முடிந்ததுடன், பல அரச துறைகளில் வேலை செய்யும் அரச உத்தியோகத்தர்களும் விடுமுறை பெற்று வந்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.


நான்கு நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் வழங்காத நிலையில் முஸ்லிம்களின் நோன்பு பெருநாள் மற்றும் தமிழ் மக்களின் சித்திரை புத்தாண்டை வரவுள்ள நிலையில் மக்களின் கஷ்ட நிலைமையை கருத்தில் கொண்டு நாம் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் 700 சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ் தெரிவித்தார்.


ந.குகதர்சன்













Subscribe to this Blog via Email :
Previous
Next Post »