(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் தலைவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக பிரதமரிடத்தில் சபையில் கேள்விகளை தொடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) புதன்கிழமை, பிரதமர் இடத்திலான கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, “ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் நியமனம் குறித்து சபையில் கேள்வி எழுப்பினார்.
” ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் ஆட்சியை அமைக்கும்போது அவர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை முன்வைத்தனர். தேர்தல் மேடைகளில் அடிக்கடி இதனை கூறினர். இதனால் நாட்டில் சகலருக்கும் ஒரே விதமான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டது.
ஆனால், இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளமையானது இன குழுக்களுக்கு இடையில் ஒற்றுமையை உருவாக்கும் திசைக்கு அப்பால் சென்று மக்கள் குழுக்களை பிரிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது என்றே நாம் கருதுகிறோம் என்றார்.