உலக மக்களிடையே மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஜேக் டோர்ஸி விலக உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகின்ற காரணத்தினால் அதன் செயல் தன்மை குறித்து சிலர் கேள்வி எழுப்பி உள்ளதாக கடந்த ஆண்டில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து அவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக சிஇஓ பொறுப்பில் இருந்து விலகும் முடிவை எடுக்கும் நேரம் என ஜேக் டோர்ஸி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டரின் பங்கு மதிப்புகள் இன்றைய காலை நேர நிலவரப்படி எழுச்சி கண்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்த உள்ளவருக்கு நிறைய சவால்கள் காத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக 2008 வரை ட்விட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்த ஜேக் டோர்ஸி, 2008 வாக்கில் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். 2015 முதல் மீண்டும் அந்த பொறுப்பை கவனித்து வந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து அந்த பொறுப்பில் அடுத்து யார் நியமிக்கப்பட உள்ளார்கள் என்ற கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்தன. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஐஐடி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த பராக் அகர்வால் தலைமை தொழில்நுட்ப அதிகாரியானார். பல்வேறு பொறுப்புகளை வகித்தபின் தற்போது ட்விட்டரின் சி.இ.ஓ. ஆகிகிறார் பராக் அகர்வால்.