Our Feeds


Wednesday, November 10, 2021

SHAHNI RAMEES

மனைவியை கொலை செய்த கணவர் – காப்பற்ற முயற்சித்த மாமியாா் மீதும் தாக்குதல்

 

மாத்தறை, மாலிம்பட வடக்கு பிரதேசத்தில் நபரொருவர் இன்று (10) காலை தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன் மாமியாரை பொல்லால் தாக்கி காயமடையச் செய்துள்ளதாக மாலிம்பட பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

கீதானி களுஆராச்சி (33 வயது) என்றிழைக்கப்படும் ஒரு குழந்தையின் தயாரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளாா். இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் பொலிஸாா் தெரிவித்தனா். இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பித்துவந்த சிப்பாய் ஒருவர் என்றும் பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் தனது இரண்டு வயது குழந்தையையும் அழைத்துக் கொண்டு அந்த பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னா் அவர் மொரவக பொலிஸாரிடம் ஆஜராகியுள்ளாா்.

குடும்ப பிரச்சினையே இவ்வாறு கொலையாக உருவெடுத்துள்ளதாக பொலிஸாா் மேலும் குறிப்பிட்டனர். தலையில் படுகாயத்துக்குள்ளான சந்தேகநபரின் 54 வயதுடைய மாமியாா் சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு உயிரிழந்த பெண்ணின் கணவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாலிம்பட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.சீ. அலவத்த உள்ளிட்ட குழுவினர் இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »