பார்படோஸ், ஒரு குடியரசாக இன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்படோஸ் நாட்டின் தலைவராக இதுவரை விளங்கிய பிரித்தானிய அரசிக்குப் பதிலாக பார்படோஸின் ஜனாதிபதியே இனிமேல் நாட்டின்; தலைவராக விளங்குவார்.
அத்திலாந்திக் சமுத்திரத்தில் கரீபியன் பிராந்திய நாடுகளில் ஒன்றாக பார்படோஸ் உள்ளது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் அங்கு முதல் தடவையாக ஆங்கிலேய கப்பல்கள் சென்றிருந்தன.
அதன்பின் பார்படோஸ் ஆனது பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்குட்பட்டது. 1966 ஆம் ஆண்டு பார்படோஸ் சுதந்திரம் பெற்றபோதிலும் பிரித்தானிய முடியாட்சிக்குட்பட்ட நாடாக இருந்தது.
பார்படோஸை குடியரசாக்குவத்றகான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சுதந்திரமடைந்து 55 ஆவது வருட நிறைவு நாளான இன்று செவ்வாய்க்கிழமை பார்படோஸ் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவரை பார்படோஸ் ஆளுநர் நாயகமாக பதவி வகித்த டேம் சாண்ட்ரா மசோன் அந்நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றார்.
இப்பதவியேற்பு வைபவத்தில் பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸும் கலந்துகொண்டார்.