கொவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் ஒன்றுகூடல் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் இன்று (11) புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்துக்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, முழு நாட்டுக்கும் அதிகாரம் பெற்றுள்ள உத்தியோகத்தர் ஒருவரால் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்காக பிறப்பிக்கப்படும் கட்டளைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அனுமதி பெறாது ஒன்றுகூடல்கள் , செயற்பாடுகள் , ஒன்றுகூடலுக்கான சந்தர்ப்பம் ஏற்படும் வகையிலான நிகழ்வுகள் என்வற்றை நடத்தக்கூடாது என குறித்த அதிவிசேட வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனுமொரு தரப்பினரால் இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு , குறித்த விதிமுறைகளை மீறும் வகையிலான செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகளுக்கு அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டாலும் அவற்றில் பொதுமக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.